Tuesday 3 October 2017

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .

 பூமியில் விழுந்த  விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது!

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில்
உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும்
சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால்
வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் ! அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

எனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான
என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த,
என் பலவீனத்திற்கும், உடலுக்கும் மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த
என்னுடைய பிரச்சனைகளுக்கு மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான
என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை எனக்குத் தெளிவாகப்
புரியவைத்த மரணத்திற்கு மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச்
சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது
என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம் ஏமாந்துக் கொண்டிருந்த என்னை,
அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் நன்றி சொல்லவேண்டும் ! இந்த வாழ்நாள் போதாது !